1048 ஒருவழிப் பாதை
ஆயத்தம் ஆகி அடியனும் வந்தேன்
ஆட்கொள்ள வேண்டி என்னையேத் தந்ததேன்
தாமதம் செய்வதில் இலாபமும் என்ன
தயக்கம் கொண்டிடக் காரணம் என்ன
தகுதி இன்மையால் தயக்கம் கொண்டாயா
தனித்தவன் என்பதால் சுணக்கம் கொண்டாயா
எதற்குமே உதவிட்டான் என்கின்ற எண்ணமா
எவருடன் இணங்கான் என்கிற தயக்கமா
இவற்றை எண்ணாமல் நான் வரவில்லை
உன்னிடம் வந்திடும் தகுதியும் எனக்கில்லை
அதற்கான அவசியம் எனக்குமே இல்லை
அதுபற்றி யோசிக்க நேரமும் இல்லை
உள்ளம் உந்திட உடன்பட்டு வந்தேன்
உன்னுளம் இரங்கிடும் என்பதை அறிவேன்
இதைவிட்டால் எனக்கு கதிவேறு இல்லை
உனைவிட்டால் எனக்குப் புகலிடம் இல்லை
வேறென்ன செய்ய நீயுமே சொல்லு
வேறெங்கு செல்ல நீவழி சொல்லு
படைத்து, காத்து மீட்டபின் உனக்கு
மறுத்திடும் மனமா உன்னிடம் இருக்கு
ஒருவழிப் பாதை இதுவென அறிவேன்
உன்னிடம் வந்தபின் திரும்பிட அறியேன்
எதுவரை தாமதம் நீ செய்த போதும்
அதுவரை அடிமை காத்துமே கிடப்பேன்
மத்திகிரி, 24-1-2019, இரவு, 11.10