Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Songs 946 to 950

$
0
0

946 அலட்சியம் செய்கிறேன்

 

அலட்சியம் செய்கிறேன்

பிறரை எளிதில்

ஆத்திரம் கொள்கிறேன்

உடனே மனதில்

 

ஒதுக்கி வைத்திட

உள்ளத்தில் நினைக்கிறேன்

ஒதுங்கி நின்று

என்னையே ஏய்க்கிறேன்

 

ஒத்து வராது

இனிமேல் என்று

உடனே நானும்

சொல்லி விடுகிறேன்

 

எப்படி எடுத்து

பிறர் சொன்னாலும்

கேட்டிட மட்டும்

நானுமே மறுக்கிறேன்

 

ஆயினும் மனதில்

நடந்ததை எண்ணி

ஆத்திரம் கொண்டு

அமைதியை இழக்கிறேன்

 

எதிர்மறை எண்ணம்

என்னிலே வளர்ந்து

என்னையே ஆள

இடமுமே தருகிறேன்

 

வீணாய்க் கற்பனை

பலவும் செய்து

கோபம் கொண்டு

அதனை வளர்த்து

 

எரியும் தீயில்

எண்ணை ஊற்றி

மேலும் மேலும்

நெருப்பை வளர்த்து

 

இறுதியில் அதுவும்

என்னை அழிக்க

இடமும் தந்து

முடிந்துமே போகிறேன்

 

{இந்த எனது

நிலையை அறிந்து

என்னை மீட்க

இரக்கம் கொண்டு

 

முடிந்த என்னை

மீண்டும் உயிர்த்து

உனது அருளால்

மீட்டுக் கொண்டாய்}

 

ஆயினும் இந்த

குணத்தின் மீது

இறுதி வெற்றி

இன்னும் இல்லை

 

இறுதி வரையில்

இதனுடனே

வாழ வேண்டும்

வழியும் இல்லை

 

மத்திகிரி, 21-8-2018, இரவு, 11.55

 

947 மனித மதம்

 

எத்தனை எளிதாக

மதங்களை தொகுத்தார்

எத்தனை எளிதாக

எல்லைகள் வகுத்தார்

முற்றிலும் அவைமூலம்

மனிதரைப் பிரித்தார்

மூடத்தனமான

கருத்தினை வைத்தார்

 

கருவினில் உருவாக்கி

வெளிவந்த போது

மாதமொன்ற ஒன்றை

சிசுமீது திணித்து

அடையாளம் சிலவற்றை

அதற்க்காய்த் தொகுத்து

அதற்கேற்ப அதனை

உருவேற்றி வைத்து

 

புரியாத வயதில்

தாம்கொண்ட கருத்தை

புரியாமல் அதற்கும்

சொல்லியே கொடுத்து

வளர்ந்த பின்னாலே

சுயமாய் சிந்திக்க

வழியேதும் இல்லாமல்

வாழவும் வைத்தார்

 

இதுபோல் நாமும்

வளர்ந்ததினாலே

எதுசரி தவறென

என்னவும் மறந்தோம்

நம்மதம் ஒன்றே

சிறந்தது என்று

பிறரது மதத்தை

காலால் மிதித்தோம்

 

அந்த வெறியும்

தலைக்குமே ஏற

அதனால் தீவிர

வாதத்தை வளர்த்தோம்

அதற்கு விலையை

நாமும் கொடுத்து

மனித குலத்தை

மெல்ல அழித்தோம்

 

அழிய வேண்டிய

மதத்தை வளர்த்து

அதன்பேரால் நாம்

நாமையே அழித்து

மானுடப் பண்பை

முற்றாய் இழந்து

மண்ணில் வாழ்ந்து

மனிதம் இழந்தோம்

 

மத்திகிரி, 22-8-2018, மதியம் 2.30

 

948 உண்மையா

 

எப்போதும் உன்னிடம்

தப்பாது வருவேன்

என்தேவை அனைத்தும்

உன்னிடம் சொல்வேன்

 

இப்போதும் அதையே

நானுமே செய்கிறேன்

தப்பாது நீவந்து

இணைந்திடச் சொல்கிறேன்

 

உன்னோடு பேசி

உறவாடும் போதிலே

உள்ளத்தில் உள்ளதை

உன்னிடம் சொல்லுவேன்

 

எண்ணிலாக் கேள்விகள்

என்முன் தோன்றிட

உன்னிலே அதற்கு

விடையைத் தேடுவேன்

 

உன்னிந்த உறவும்

உண்மையில் உள்ளதா

வீணான என்மனக்

கற்பனை என்பதா

 

இதுபோன்ற கேள்விகள்

பலவுமே வந்திட

எவ்வித பதிலை

நானுமே தந்திட

 

எனக்குள் நானுமே

என்னுடன் பேசிடும்

இவையாவும் உன்

உரையாடல் என்பதா?

 

எவ்வித பதிலைநீ

தருகின்ற போதிலும்

அவையாவும் என்

பதிலெனக் கொள்வதா?

 

புரியாது இதுபோலே

தவித்திடும் போதிலே

புதிராக நீயும்

இருந்திடக் கூடாது

 

அதற்காகத்தான்

நானுமே அழைக்கிறேன்

அறிந்தநீ வந்துமே

பதிலையும் தந்திடு

 

எதுவான போதிலும்

ஏற்றுக் கொள்கிறேன்

எவிதம் சொன்னாலும்

கேட்டுக் கொள்ளுவேன்

 

கண்களும் கசிந்திட

கரம்கூப்பி வருகிறேன்

நீதந்த பதிலுக்கு

நன்றியும் சொல்கிறேன்

 

உள்ளாக நீநின்று

உரைத்திடும் வார்த்தையை

உரைத்திட வழியில்லை

என்பதை அறிகிறேன்

 

வெளியாக நான்கூறும்

வார்த்தைகள் யாவுமே

உள்ளாக உன்னாவி

தந்ததை உணர்கிறேன்

 

அதனாலே நான்கொண்ட

ஐயமும் நீங்கிட

ஐயனே மீண்டுமே

உன்பாதம் பணிகிறேன்

 

மத்திகிரி, 23-8-2018, இரவு, 11.30

 

949  இயற்கையின் அழைப்பு

 

கூக்குகூவென குயில்களும் கூவின

குளிர்ந்த காற்றுமே அதனுடன் சேர்ந்தது

மயில்களும் தோகையை விரித்தே ஆடின

மனதும் அவற்றுடன் சேர்ந்தே பணிந்தது

 

எத்தனையோ பணிகள் இருந்திட்ட போதும்

இயற்கையும் அழைக்க மறுத்திட முடியுமா

இதயமும் ஏங்கி அவற்றுடன் தவிக்கையில்

இறைவனைப் பணியாமல் இருந்திட முடியுமா

 

இதற்கெனவே நம்மை இகத்தில் படைத்தான்

இயற்கையை அதற்குத் துணையாய் வைத்தான்

இதயத்தில் வந்து குடியும் புகுந்தான்

இசையினில் மயங்கி அருளும் பொழிவான்

 

அந்த அருளின் மழையில் நனைவோம்

இன்ப இசையால் அவனதுத் துதிப்போம்

இயற்கை அழைக்கும் அழைப்பை ஏற்று

இதயம் நிறைந்து அவனைப் பணிவோம்

 

துதிக்கும் போது கால நேரம்

தடைகள் எதுவும் தருவது இல்லை

தடைகள் எதுவும் இடையில் வரினும்

துதித்துப் பாடிட நிலைப்பதும் இல்லை

 

தடைகள் இன்றி துதிக்கும் இயற்கை

தந்திடும் நமக்கு அறிய வாய்ப்பை

உணர்ந்து நாமும் இணைந்து கொள்வோம்

உருகிப் பாடி பணிந்து சொல்வோம்

 

மத்திகிரி, 25-8-2018, காலை, 5.50 am.

 

950 அதிகாரமில்லை

 

துக்கத்தை கொண்டாட நேரமில்லை

துன்பத்தை சுமந்திடத் தேவையில்லை

நீவந்து என்னையும் மீட்டபின்னே

இதற்கெல்லாம் இப்போது வாய்ப்புமில்லை

 

பாவத்தின் வலிமையை நீபோக்கினாய்

மரணத்தின் கூரையும் நீயொடித்தாய்

அதனாலே அவற்றுக்குப் பெலனுமில்லை

அவைஎண்ணி பயந்திடத் தேவையில்லை

 

தப்புகள் தவறுகள் செய்யும்போது

அதற்கேற்ப தண்டனை வருவதுண்டு

அவைசெய்யா மனிதனும் எவனுமில்லை

அதனாலே மனமொடியத் தேவையில்லை

 

நீவந்து எமக்காக செய்ததுமே

இவைமீது வெற்றியைத் தரவேண்டித்தான்

ஆயினும் அவற்றாலே தோற்கும்போது

அதையெண்ணி அஞ்சிடத் தேவையில்லை

 

உள்ளாக நீதந்த உன்னாவியும்

உயிர்பித்து எம்மையும் வழிநடத்தும்

தப்புத் தவறுகள் செய்யும்போது

தவறாமல் எம்மையும் எச்சரிக்கும்

 

பாவப் பரிகாரம் நீசெய்த பின்னே

பாவத்திற் கதிகாரம் என்னில் இல்லை

ஆயினும் பலவீனம்  தாக்கும்போது

அதற்கு என்மேல் வெற்றியில்லை

 

மத்திகிரி, 27-8-2018, இரவு, 10.30


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles