Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Songs 951 to 955

$
0
0

951 எனது எல்லை

 

வரையரை ஏதுமே உனக்குமே இல்லை

எந்த வரைவுக்குள் நீ வருவதும் இல்லை

எவ்விதம் உன்னை உணர்ந்திட்ட போதும்

சொல்லிட எவ்வித வழியுமே இல்லை

 

படைத்து காத்து அழிக்கின்றாய் என்று

பலவிதம் உன்னைக் கூறுவதெல்லாம்

மொழிகள் எமக்கு சொல்லிக் கொடுத்த

உவமைகள் அன்றி வேறெதும் இல்லை

 

எண்ணத்தால் எண்ணித்தான் புரிந்திடுவேனோ

எண்ணத்தைத் தாண்டித்தான் உனையறிவேனோ

அறிந்தவை அனைத்தும் எண்ணத்தின் செயலே

என்பதை நானும் மறுத்திடுவேனோ

 

மறையின் மூலம் முழுதாய் உன்னை

அறிந்திட எமக்கு வழியும் இல்லை

ஆயினும் எமது எல்லையை உணர்ந்து

அதையும் தந்தாய் அறிய உன்னை

 

எந்த உறையும் அந்த மறையை

முழுதாய் அறிந்து உரைக்கவும் இல்லை

நாங்கள் அளிக்கும் விளக்கம் மூலம்

உன்னை விளங்கிட வழியும் இல்லை

 

இதனை நானும் நன்கு உணர்ந்து

எனது எல்லையை அறிந்து கொண்டேன்

எனவே உன்னைப்@ புரிய வேண்டி

எவ்வித முயற்சியும் இனிமேல் செய்யேன்

 

மத்திகிரி, 27-8-18,  இரவு, 11.30

 

952 உன் தனித்துவம்

 

நீதரும்போது தனித்துவம் இருக்கும்

நான் பெறும்போது நிறைவுமே இருக்கும்

தந்திட வாய்ப்புகள் ஆயிரம் இருக்கும்

பெற்றிட எனக்கு தகுதியும் இருக்கும்

 

எப்போது என்பது உனக்குத்தான் தெரியும்

என்தேவை எத்தனை இருந்திட்டபோதும்

முன்னறிந்த நீ செய்கின்ற போது

முற்றான நம்பிக்கை உன்மீது இருக்கும்

 

இதுவரை அதுபோல் செய்ததை எண்ணி

என்மனம் அமைதியாய் எதிர்பார்த்து நிற்கும்

இடையினில் தாமதம் நீசெய்யும்போது

அதிலுள்ள காரணம் எனக்குமே புரியும்

 

ஆயினும் ஒருவித அச்சமும் இருக்கும்

அதற்கான காரணம் உனக்குமே தெரியும்

நீடித்த தாமதம் கோபத்தை கிளற

உன்னிடம் வழக்காட என்மனம் துடிக்கும்

 

எத்தனை வாதங்கள் நான்செய்த போதும்

எடுபடாது உன்முன் அவற்றில் எதுவும்

அதைத்தான் எண்ணி அச்சமும் கொண்டேன்

அதனை அறிந்து இரங்கிடு என்றேன்

 

தனித்து தரவும் தெரிந்த உனக்கு

எடுத்து நானிதை சொல்லிட முடியுமா

பெற்றிடும் தகுதியை தந்தது யாரென்று

உனக்கே நானும் சொல்லவும் வேண்டுமோ

 

மத்திகிரி, 29-8-2018, இரவு, 11.10

 

953 வதைக்கிறேன் மீண்டும்

 

வதைக்கிறேன் மீண்டும்

வள்ளலே உன்னை

விலைதந்து என்னை

மீட்டிட்ட போதும்

 

தடுமாறும் போது

மீண்டும் மரமேற்றி

தயங்காமல் ஆணி

அடிக்கிறேன் நானும்

 

புரையோடிப் போன

பாவ குணமதும்

ஒருநாளும் போகாது

உயிர்வாழும் வரையும்

 

நீசெய்த பரிகாரம்

அதையே நினைவூட்ட

கரமேந்தி வந்தேன்

மீண்டும் மீண்டும்

 

புத்தியால் புரிந்து

நான் வரவில்லை

முக்தி பெறவேண்டி

வருகிறேன் நானும்

 

இறுதி வரையிலே

என்னுள்ளே போராட

உன்னரு தரவேண்டி

கெஞ்சியே நின்றேன்

 

தடுமாறும் போதெல்லாம்

நிலைமாறி போகாமல்

தாங்கிச் சுமந்திட

அழைக்கிறேன் உன்னை

 

போராடி நான்வீழ்ந்து

அடிப்பட்டுக் கிடக்கையில்

மருந்திட்டு குணமாக்க

மன்றாடி நிற்கிறேன்

 

மீண்டும் சுகமாக்கி

போராட துணைநின்று

இறுதியில் கரைசேர்ப்பாய்

என்றுமே அறிகிறேன்

 

அதுவரை குருவாகி

அனுதினம் வழிகாட்டி

என்னைநீ நடத்திட

தருகிறேன் என்னை

 

மத்திகிரி, 29-8-2018, இரவு, 11.50

 

954  நீயே இறக்கு

 

பாவத்தின் பாரமும் தாங்கவில்லை

பாவத்தின் தன்மையும் புரியவில்லை

எவர்வைத்தார் என்னுள்ளே இதனைஎன்று

இதுவரை எனக்கும் புரியவே இல்லை

 

ஆதி மனிதனின் பாவத்தின் தன்மை

அதுவாக என்னுள்ளே வந்தது என்று

வேதத்தின் மூலமே விளக்கிக் கூறி

என்னையும் ஏற்றிட பிறருமே சொன்னார்

 

கருமத்தால் வந்த பலனும் என்று

கடந்த பிறவிமுதல் தொடர்ந்தது என்று

நாம் செய்த கருமத்தால் வந்தது என்று

நம்மையும் ஏற்றிடச் சொன்னார் சிலபேர்

 

பாவம், கர்மம் என்பது எல்லாம்

நம்மீது பிறர்வைத்த பாரம் என்று

அரைகூவல் இட்டு அழைத்த பிறரும்

அவற்றை தூக்கி எறியவும் சொன்னார்

 

எதை ஏற்க எதைவிட என்பதுவும்

என்முன் உள்ள கேள்வி அல்ல

எதுவான போதிலும் எனது நிலைமை

பாரமாய்ப் போனது என்பதே உண்மை

 

தப்பு, தவறு, பாவம் என்று

சொற்களின் மூலம் எதைச் சொன்னாலும்

என்னுள்ளே ஏதோ குறையொன்று உள்ளது

எப்படி நானதை போக்குவதுதென்று

 

இதற்கான விடைதேடி அலைந்த போது

விடையாக வந்தாய் நீயும் அன்று

குருசினில் என்பாவம் போக்கவென்று

குருதியை சிந்தினாய் நீயும் நன்று

 

ஏற்பதும் மறுப்பதும் இனியுன் பாடு

என்றே என்மீது பொறுப்பை வைத்தாய்

அதன்பாரம் தாங்காது நானும் வந்தேன்

ஐயனே நீயே இறக்கிட்டு என்றேன்

 

மத்திகிரி,  30-8-2018, மதியம் 2.40

 

955 உன் கடன்

 

நீபார்த்துத் தந்தால்

நாங்களும் பிழைப்போம்

நீதர மறுத்தால்

வேறெங்கு போவோம்

 

மண்ணுயிர் காக்கவே

தன்னுயிர் தந்தநீ

எம்முடல் காக்கவும்

இரங்கிட வேண்டும்

 

நோய்நொடி நீங்க

பசிப்பிணிப் போக

மனுக்குலம் வாழ

உன்னருள் தேவை

 

பயிர்களும் செழிக்க

உழவரும் மகிழ

மழையைத் தருவது

உனக்குள்ள வேலை

 

ஏற்ற காலத்தில்

அறுவடை செய்ய

பருவ காலத்தில்

பயிரிட வேண்டும்

 

இயற்கையின் ஒவ்வொரு

அசைவையும் அமைத்த

உனக்கு நானிதை

சொல்லவா வேண்டும்

 

மரத்தை வைத்தவன்

நீரும் ஊற்றுவான்

என்ற பழமொழி

உனக்கென உள்ளது

 

அத்தனை நம்பிக்கை

வைத்த மனிதரும்

வேறென்ன உன்னிடம்

வேண்டி வருவது

 

நல்லோர் தீயோர்

பேதமும் இன்றி

நலக்களை அளிப்பது

உனக்குள்ள குணமே

 

அதன்படி செய்து

எம்மையும் காப்பது

உனக்கென நீயே

கொண்ட கடனே

 

அதனை உணர்ந்து

தந்த மழைக்காய்

நன்றி கூறுதல்

எமக்குள பணியே

 

ஆயினும் அறுவடை

முடிந்திடும் மட்டும்

இந்தக் கருணை

தொடர்ந்திட வேண்டும்

 

இல்லை என்றால்

இடை இடையே

வேறொரு பாடலும்

வரவும் கூடும்

 

மத்திகிரி, 31-8-2018, இரவு,  11.45


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles